யாழில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் வீட்டு கிணற்றடியில் குளிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்த 35 வயதான செல்வராசா கார்த்தீபன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்றைய தினம் (09-09-2024) அதிகாலை 5.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்று தோட்ட வேலையை செய்து விட்டு 9:30 மணி அளவில் வீட்டுக்கு வந்து குளிப்பதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குளிப்பதற்கு சென்ற கணவன் நீண்ட நேரமாகியும் வராததால் மனைவி கிணற்றடிக்கு சென்று பார்வையிட்ட வேளை கணவன் நிலத்தில் விழுந்த நிலையில் அசைவற்று காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூட்டு பரிசோதனைக்காக சடலமானது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.