இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு தொகை பீடி இலைகள் மீட்பு!

பாம்பன் அடுத்த அக்காள் மடம், வடக்கு பாக் ஜலசந்தி கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த இந்திய மதிப்பில் 5 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 780 கிலோ பீடி இலை பண்டல்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் நாட்டுப் படகை பாம்பன் பொலிஸார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுர மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம், ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம், நரிப்பையூர், மண்டபம், வேதாளை, அக்காள்மடம், பாம்பன் குந்துகால் உள்ளிட்ட பகுதியில் இருந்து சமீப காலமாக கடல் அட்டை, பீடி இலை பண்டல்கள் மற்றும் சமையல் மஞ்சள் உள்ளிட்டவைகள் அதிக அளவு இலங்கை கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாம்பன் அடுத்த அக்காள் மடம் வடக்கு கடல் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் பீடி இலை பண்டல்கள், இலங்கைக்கு கடத்த இருப்பதாக பாம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (25) இரவு பொலிஸார் இருவர் அக்காள் மடம் வடக்கு பாக் ஜலசந்தி கடற்கரை ஓரங்களில் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

அப்போது அக்காள் மடம் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தோப்பில் சரக்கு வாகனத்தில் இருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பீடி இலை பண்டல்களை கடலில் நிறுத்தி வைத்திருந்த நாட்டு படகு ஒன்றில் ஏற்றிக்  கொண்டிருந்ததை கண்ட பொலிஸார் அவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்த போது பொலிஸாரை கண்டதும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இரவு நேரம் என்பதால் பொலிஸாரால் தப்பி ஓடிய நபர்களை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகு மற்றும் சரக்கு வாகனங்களில் வைத்திருந்த சுமார் 780 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்த பாம்பன் பொலிஸார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் இலங்கை மதிப்பு சுமார் 12 லட்சம் என தெரிய வருகிறது.