செயற்கை கள் தொடர்பில் எச்சரிக்கை!

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளை அருந்தும் மக்களிடையே ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொறுப்பான தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசியல் ஆதரவாளர்கள் சிலர் தோட்டத் தொழிலாளர்களுக்கு செயற்கையான கள் போத்தல்களை இலவசமாக விநியோகம் செய்வதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

“நுவரெலியா, பதுளை, ஹட்டன் போன்ற தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் இந்த சட்டவிரோத கள் போத்தல்கள் நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றின் பாவனையால் தமது பணியாளர்கள் மத்தியில் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் தோட்ட நிர்வாகம் முறையிட்டுள்ளது.

இதனடிப்படையில் இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொறுப்பான தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.