இலங்கையில் 97 வயதில் முதுகலைப்பட்டம் பெற்ற பெண்

களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழாவில் 97 வயதான லீலாவதி அசிலின் தர்மரத்ன பாலி மற்றும் பௌத்தத்தில் முதுகலைப்பட்டத்தை பெற்றுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் (21) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

களனி ரஜமஹா விகாரையின் தலைவரும், களனி பல்கலைக்கழக வேந்தருமான சிரேஷ்ட பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரோபா இந்த முதுகலைப் பட்டத்தை வழங்கி வைத்துள்ளார்.மாபெரும் சாதனை

லீலாவதி அசிலின் தர்மரத்ன என்பவர் 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வஹரணவிலுள்ள மில்லவ கிராமத்தில் பிறந்தார். அவர் தனது ஆரம்ப கல்வியை மில்லவ பெண்கள் கல்லூரியில் கற்றுள்ளார்.

இதன்பின்னர் உயர்தரத்தில் சித்திப்பெற்று ஆசிரியர் பணியில் சேவையாற்றிய பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.1962ஆம் ஆண்டு நடைபெற்ற நொத்தாரிசுகளுக்கான பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற லீலாவதி நொத்தாரிசு பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பெண் என்ற விருதையும் பெற்று பாராட்டப்பட்டுள்ளார்.

இந்த முதுகலைப் பட்டம் தன் வாழ்வில் கிடைத்த மாபெரும் சாதனை என்றும் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி வரலாற்றில் விசேட மைல்கல்லாக விளங்கும் லீலாவதி பெற்ற இந்த முதுகலைப் பட்டம் உயர்கல்வியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.