சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளியை நாடுகடத்த திட்டம்!

சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி பெட்டியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது கைரேகை பரிசோதனைக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளால் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பொடி பெட்டியை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அரச நிறுவனங்களுக்கு அறிவித்தல் விடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பொடி பெட்டி சமீபத்தில் பெலாரஸில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் லொக்கு பெட்டியின் சகோதரராகும். கிளப் வசந்த கொலைகளை லொக்கு பெட்டியினால் திட்டமிட்டதாக செய்திகள் வந்தன.இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலக தலைவர்கள் உள்ளிட்ட 168 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் தலைமறைவாகி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அதில் பெரும்பாலான குற்றவாளிகள் டுபாயில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.