இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்!

மாலம்பே, பிட்டுகல கஹந்தோட்டை வீதியில் இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வரப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை  நேற்று (18) பிற்பகல் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.  

குறித்த வீட்டின் கீழ் தளத்தில் உள்ள அறையில் குளிரூட்டப்பட்ட நிலையில், 174 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பின் போது, ​​சந்தேக நபர் ஒருவர் குஷ் போதைப்பொருளை பொதி செய்த வண்ணம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

கண்டுபிடிக்கப்பட்ட குஷ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் பத்து கோடி ரூபா எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேயிலையை பொதி செய்யும் நிலையமாக பராமரிக்கப்பட்டு வந்த குறித்த வீடு வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 48 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.