நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை 19,20ஆம் திகதிகளில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடனான காலநிலை நிலவுவதால் கொழும்பு, காலி, களுத்துறை , கேகாலை, மாத்தறை , இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற (ஆரம்பக்கட்ட) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளுக்கு செம்மஞ்சள் நிற (இரண்டாம் கட்ட)மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள , இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, ஏலியகொட, எலபாத ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழ்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.