இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்!

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் சுமார் 6.6 கிலோ தங்கம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்கத்தின் மதிப்பு 4.5 கோடி இந்திய ரூபாய்களாகும்.

வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்த தங்கம் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, இலங்கையில் இருந்து தமிழகத்தின் தனுஸ்கோடிக்கு தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிகாரிகள் மண்டபம், வெத்தலை, களிமண்குண்டு, மரைக்காயர்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இருப்பினும், கடத்தல்காரர்கள் ஏற்கனவே கரையை அடைந்துவிட்ட நிலையில், சாலை வழியாக குறித்த தங்கம், மதுரைக்கு எடுத்துச்செல்லப்படுவதை அதிகாரிகள் அறிந்தனர்.

இதனையடுத்தே தங்கம் எடுத்துச்செல்லப்பட்ட வாகனத்தை திருப்பாச்சேத்தி கட்டணம் செலுத்தும் இடத்துக்கு அருகில் வைத்து நிறுத்தினர்.

இதன்போது கீழக்கரையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.