அம்பாறை பிரபல நகைக் கடையில் திருட்டு!

அம்பாறை- சம்மாந்துறை விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த புதன்கிழமை (7) அன்று நகை திருடப்பட்டுள்ளதாக நகைக்கடை உரிமையாளர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த சம்மாந்துறை பெரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களால் ஞாயிற்றுக்கிழமை (11) அம்பாறை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வைத்து சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில்  அம்பாறை ஹிங்குரான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் திருடப்பட்ட நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0672 260 222 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.