சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

எதிர்வரும் 15ஆம் திகதி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 

இதன்படி, ​​இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

15ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினம் என்ற காரணத்தினால் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் இணைத்து சுமார் 1500 பேரை பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

வாக்குச் சின்னத்தை அறிவிக்காத வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தைத் தவிர எஞ்சிய சின்னங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.