மற்றுமோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி!

சீஷெல்ஸில் சிறை அதிகாரிகளாக பணிபுரிய ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் முறையான அனுமதி இன்றி இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு நகரில் இயங்கும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இந்த வேலைகளுக்கு சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்துள்ளது.

பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை சோதனை செய்ததில், சீஷெல்ஸ் மாநில சிறைகளில் பணிபுரிவதற்காக வழங்கப்பட்ட 6 கடவுச்சீட்டுக்கள் மற்றும் அது தொடர்பான 6 விண்ணப்பங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர் இன்று (08) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் பணிபுரிய இலங்கையர்களை அனுப்பும் வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதால், வேலைக்காக அனுப்பப்படுவதாக கூறி பணம் பெறும் நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக விரும்புவோருக்கு www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலமோ அல்லது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ, எந்தவொரு முகவர் அல்லது கடவுச்சீட்டையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வழங்குவதற்கு முன் தகவல்களைப் பெறுமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது.