வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

நேற்றையதினம் (05-08-2024) நகர்தல் பத்திரம் ஊடாக குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்தும் வைத்தியர் அர்ச்சுனாவை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலைக்குள் அனுமதி இன்றி வைத்தியருடன் நுழைந்து காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த 02-08-2024 ஆம் திகதி இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள், வீடியோ எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் வைத்தியர் அர்ச்சுனா கடந்த சனிக்கிழமை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த வைத்தியரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, நேற்று (5) சட்டத்தரணிகள் ஊடாக வைத்தியருக்கு பிணை மனு மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், குறித்த நகர்தல் பத்திரம் ஊடான பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து வைத்தியரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.