IMF பிரதிநிதிகளை சந்திக்கின்றார் ஜனாதிபதி!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர்.

இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நான்காவது தவணையை பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

எந்தத் தாமதமும் இன்றி, தேர்தல் காலத்திலும் அந்த வேலைத்திட்டத்தில் எவ்வித விலகலும் இன்றி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைத் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் மூன்றாவது பரிசீலனையில் கிடைக்கவுள்ள 4வது தவணை எந்த வகையிலும் தாமதமானால் அது இலங்கையின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்த விளைவை தவிர்க்க ஜனாதிபதி விசேட வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளார்.

வரவிருக்கும் காலத்தில், கடன் உரிமையாளர்களின் இந்த திட்டத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று (31) மாலை சந்தித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் தவணை தொடர்பிலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.