குளிக்கச் சென்ற இடத்தில் கைகலப்பு!

புத்தளம் (Puttalam) வண்ணாத்திவில்லு காவல்துறை பிரிவிற்குற்பட்ட வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு முன்னால் உள்ள கலா ஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் மற்றும், உயிரிழந்தவரின் நண்பர்களும் சேர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் நேற்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சடலமாக மீட்கப்பட்டவர் உட்பட நால்வர் குளிப்பதற்கு கலா ஓயா ஆற்றிற்கு வந்திருந்த நிலையில், அவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 

இதன்போது குறித்த இடத்திற்கு குளிப்பதற்காக வருகை தந்த மற்றுமொரு குழுவினருடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சடலமாக மீட்கப்பட்டவர் தவிர்ந்த ஏனைய குழுவினர் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், தப்பிச் சென்ற குழுவினர், சடலமாக மீட்கப்பட்டவரைத் தேடி மீண்டும் கலா ஓயா ஆற்றிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் வண்ணாத்திவில்லு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வந்தனாகம, கலங்குட்டிய, கல்நேவ பகுதியைச் சேர்ந்த எச்.எம். வசந்த பிரியதர்ஷன (வயது 47) திருமணமாகாதவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுவாங்குளம் பகுதியில் உள்ள சுற்றுலா பங்களாவை திருத்துவதற்காக வருகை தந்ததாகவும், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு புத்தளம் நீதிமன்ற பதில் நீதவான் வசீம் ராஜா (Wasim Raja) வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சடலத்தைக் கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளார்.

​​சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை வண்ணாத்திவில்லு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.