அம்பாறையில் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது!

நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை நுகர்ந்த 4 சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியிலுள்ள நிறமூட்டும் தொழிற்சாலையில் நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கடந்த திங்கட்கிழமை(29) இரவு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்கமைய செயற்பட்ட பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதுடன் ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த 4 சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பொலிஸார் தகவல்

மேலும் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் 20, 18, 17, 17, வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும். சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.