யாழில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மோட்டார் சைக்கிளொன்றை திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த மாதம் 26அம் திகதி யாழ்ப்பாணம் (Jaffna) நீதவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமதிலக தலைமையிலான காவல்துறையினர் 24 வயதான சந்தேகநபரை சாவகச்சேரி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் ஒரு கிராம் 30 மில்லிகிராம் அளவான ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வருகை தந்தபோது “வெளியே நின்ற மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் திருடிச் சென்றேன்” என சந்தேக நபர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.