கெஹெலிய குடும்பத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள்களின் ஒன்பது கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வைப்புக்கணக்குகள் மற்றும் மூன்று ஆயுள் காப்புறுதிப்பத்திரங்களை முடக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் காரணமாக தனியார் வங்கியொன்றின் கணக்குகள் மற்றும் காப்புறுதிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச்சட்டத்தின் 53(1) பிரிவின்படி பணமோசடி குற்றத்தின் கீழ் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பில் விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, தடை உத்தரவை மேலும் நீட்டிக்கவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதேவேளை, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஒப்படைக்கப்பட்ட கார் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் ஆணைக்குழு அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.