சம்பந்தனின் வெற்றிடத்துக்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் (R. Sampandan) காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று (30.06.2024) இரவு 11 மணியளவில் கொழும்பில் (colombo) காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு (colombo) தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அடுத்து அதிக வாக்கு
2020 பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில், இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன் 16,770 வாக்குகளைப் பெற்றார்.

சம்பந்தனை அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் அவர், நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கவுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆர்.சம்பந்தன் மறைவிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.