ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் சம்பந்தன் தவிர்க்க முடியாத ஆளுமை!

ஈழத் தமிழர்களின் மூத்த பெரும் தலைமை தனது 91ஆவது வயதில் இன்று தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டது.

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாததும் மறுக்க முடியாததுமான மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன்(Rajavarothiam Sampanthan) ஐயா அவர்கள்.

உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று இயற்கை எய்தினார்.

மிகப்பெரும் ஆளுமை
சுதந்திரத்திற்கு பின்னரான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றிலும், உரிமை கோரிய ஈழ விடுதலைப் போராட்ட காலம் மற்றும் ஆயுத போராட்டம் மெனிக்கப்பட்டதன் பின்னரான காலத்திலும் ஈழத் தமிழ் மக்களிடத்தினின்றும் அவர் சார் அரசியலினின்றும் பிரிக்க முடியாத ஒரு ஆளுமையாக சம்பந்தன் அவர்கள் இருந்திருக்கின்றார்.

விமர்சனங்களுக்கு அப்பால் தன்னுடைய காலத்திற்குள் ஈழத்தமிழர்களுக்கு அரசியல்சார் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது மாத்திரமின்றி இறுதிவரை அதே கொள்கையில் உறுதியாகவும் நின்று மடிந்து போயிருக்கின்றார்.

1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் பிறந்தவர் சம்பந்தன். சம்பந்தன் யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி மற்றும் மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வியை தொடர்ந்த சம்பந்தன் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானவர் சம்பந்தன்.

1972ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்து பின்னர் 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவெடுத்த கட்சியின் ஊடாக 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 15,144 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார் சம்பந்தன்.

1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனையடுத்து 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட சம்பந்தனால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாமல் போனது.

இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம், அவர் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட ஏழு சந்தர்ப்பங்களிலும் ஒரே ஒரு முறை மாத்திரமே தோல்வியை சந்தித்திருக்கின்றார்.

இதேபோல, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈபிஆர்எல்எப், டெலோ உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதன் பின்னர், அந்த கூட்டமைப்புக்கு சம்பந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு 18 வருடங்களின் பின்னர் மீண்டும் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அதன் பின்னர், 2004, 2010, 2015 மற்றும் 2020ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தல்களின் தமிழரசுக் கட்சியின் ஊடாக போட்டியிட்ட சம்பந்தன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

இவற்றுள், 2015ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் சம்பந்தன் செயற்பட்டு வந்துள்ளார்.

இதற்கு முன்னர், 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி விலகியிருந்தார்.

அத்தோடு, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை அனுமதிக்காததால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட நேர்ந்தது.

இந்த சமயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னரான தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் ஊடாக தேர்தலில் போட்டியிட்ட சம்பந்தன் தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், உடல்நலக் குறைவு காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் உள்ளிட்ட பல அரசியல்சார் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது குறைவாக இருந்த போதும், தமிழர் சார் அரசியல் நகர்வுகளை பழைய உத்வேகத்துடனேயே முன்னெடுத்து வந்தார்.

குறிப்பாக, தற்போதைய அரசியல் பரப்பில் இருக்கக் கூடிய மூத்த அரசியல் தலைவர்களான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூத்த தலைவர்களாக இருக்கட்டும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகளாக இருக்கட்டும் அனைவருக்குமே சம்பந்தன் மீது தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் காணப்பட்டது. இதற்கு சம்பந்தனுடைய ஆளுமையும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

இலங்கை, தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக உள்ளூர் மாத்திரமின்றி சர்வதேச தலைவர்களையும் சந்தித்து தமது அழுத்தங்களை கொடுப்பதும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் சம்பந்தன் எப்போதுமே சோர்வு காட்டியதில்லை.

குறிப்பாக, நாடாளுமன்றத்திற்குள் இடம்பெறும் வாத விவாதங்களின் போதும், தமிழர்களுக்கு எதிராகவோ, அல்லது தமிழர்களை தூற்றும் விதமாகவோ, கீழ்நிலைப்படுத்தியோ சிங்கள அரசியல்வாதிகள் கூச்சலிடும் போது அதற்கு தக்க பதிலடி கொடுத்து சம்பந்தன் ஆற்றும் உரை பலரிடத்தில் வரவேற்பை பெற்ற ஒன்றாக பார்க்கப்பட்டிருக்கின்றது

இவைகளைக் கடந்து தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்குப் பின்னர் ஒரு அடைமொழியுடன் நோக்கப்பட்ட ஒரு தலைவர் என்றால் அது இராஜவரோதயம் சம்பந்தன் ஒருவரேயாவார்.செல்வநாயகம் ‘தந்தை’ என்று விழிக்கப்பட்டது போன்று, சம்பந்தன் ‘ஜயா’ என்று விழிக்கப்பட்டார்..

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது பல தசாப்தங்களாக கேள்விக் குறியாகவே இருக்கும் நிலையில், தன்னுடைய காலத்தில் ஏதாவதொரு விடயத்தை உருப்படியாக செய்ய வேண்டும் என்பதில் சம்பந்தன் மிகத் தெளிவாகவே செயற்பட்டிருந்தார்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளிருந்து தமிழர் உரிமைக்காக சம்பந்தன் குரல் கொடுத்து வந்த போதிலும், உரிமை கோரிய ஆயுத போராட்டக் காலத்தில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டுக் காலத்தில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக சம்பந்தன் செயற்பட்டிருக்கவில்லை என வரலாறு கூறுகிறது..

குறிப்பாக, அந்த காலப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய அமைப்புக்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ தமிழர் அரசியலில் எவ்விதமான தீர்மானிக்கும் இடமும் இருந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்தான் சம்பந்தன் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றிருக்கின்றார். தலைமைப் பொறுப்பை ஏற்ற சம்பந்தன் என்றுமே சளைத்துப் போய்விடவிலலை.

அவர் முன்னால் அடுத்த தமிழர் தலைமுறை நிம்மதிப் பெருமூச்சு விட தேவையான பாதையை அமைக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, தன்னுடைய காலத்தில் ஒரு சரியான அடித்தளத்தை இடுவதற்கான தற்துணிவும் ஆற்றலும் உள்ள தலைமைத்துவம் அவரிடம் இருந்தமை மறுக்க முடியாத ஒன்று… அவரது இழப்பும் ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது..