மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

  தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிவப்பு அறிவித்தல்

சிவப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, 06 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55 மற்றும் 70 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட பகுதியில் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாக நிலத்திற்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல், மறு அறிவித்தல் வரை அந்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.