அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு!

அரச சேவையின் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை சேவைக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்கு பதிலாக 25,000 ரூபாவை சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாது விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில (Mahesh Gammanpila) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சுற்றறிக்கை விதிகள்
இந்த கொடுப்பனவு இலங்கை பொறியியல் சேவை, கட்டிடக்கலை சேவை மற்றும் நில அளவையாளர் சேவை அதிகாரிகளுக்கும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை விதிகள் 01.07.2024 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கொடுப்பனவுகள்
அத்துடன், அண்மையில் நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.