யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக நின்ற மர்ம கார்

யாழ் போதனா வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான 13ஆம் இலக்க நுழைவாயிலை முற்றாக மறித்தவாறு நபர் ஒருவர் காரினை நிறுத்தி சென்றுள்ளார்.

இதனால் மருந்து களஞ்சியத்தில் இருந்து வைத்தியசாலை வாகனம் வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால், வைத்தியசாலை ஊழியர்கள், காரின் சாரதியை தேடி உள்ளனர்.

நீண்ட நேரமாகியும் காரின் சாரதி சம்பவ இடத்திற்கு வராததால், வைத்தியசாலை பணிப்பாளர் ஊடாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டதுடன், அயலில் உள்ள கடைகளில் விசாரித்த போதிலும் காரின் சாரதியை கண்டறிய முடியாததால், காரினை அவ்விடத்தில் இருந்து கனரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு, பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

காரின் இலக்க தகட்டின் ஊடாக அதன் உரிமையாளரை கண்டறிவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.