பறவைக் காய்ச்சல் தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா போன்ற அயல் நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது. இது முதலில் பறவைகளை பாதிக்கிறது, பின்னர் வைரஸ் மற்ற விலங்குகளையும் மனிதர்களையும் பாதிக்கிறது.

வைரஸின் பல திரிபுகள்

இன்ப்ளூயன்ஸா வைரஸின் பல திரிபுகள் மற்றும் துணை திரிபுகள் உள்ளன. சமீபத்தில், இன்ப்ளூயன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுமி இந்தியாவில் அடையாளம் காணப்பட்டார்.

2019ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்ப்ளூயன்ஸா ஏ (எச்.9.என்.2) வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி அந்த சிறுமியாகும்.

இதுவரை பதிவாகியுள்ள பறவைக் காய்ச்சலின் அனைத்தும் விலங்குகளிடமிருந்து வந்தவையாகும், மேலும் பறவைக் காய்ச்சல் மனிதனிடம் இருந்து மற்றுமொரு மனிதனுக்கு பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், H5, H7 மற்றும் H9 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பறவைக் காய்ச்சல் நோயாளிகளை அடையாளம் காணும் திறன் இலங்கையில் உள்ளது.

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல் கண்காணிப்பை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் பறவைக் காய்ச்சல் நோயாளிகளைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளதென மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு ஏற்படுவது அரிதாக இருந்தாலும், விலங்குகளுடன் சுற்றித் திரிபவர்கள் எப்போதும் சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.

தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்களை அணியுங்கள் என மருத்துவர் ஜூட் ஜெயமஹா மேலும் தெரிவித்துள்ளார்.