தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களின் மாதாந்த கொடுப்பனவை எட்டாயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சரவை எடுத்த தீர்மானம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவர்களுக்கு மாதாந்தம் ஒதுக்கப்படும் 4800 ரூபாயைத் தவிர கூடுதல் பணம் எதையும் செலவழிக்க வேண்டாம் என்றும் அமைச்சகம் கல்லூரிகளுக்குத் தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ஒதுக்கப்படும் 160 ரூபா தொகை போதுமானதாக இல்லை என அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம் 

இதனடிப்படையில், கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ள நிலையில் அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இருந்தும் மாணவர்களுக்கு கொடுப்பனவு கிடைக்காதது பாரிய பிரச்சினை எனவும் மற்றும் இதன் காரணமாக கல்லூரி வளாகத்தில் கிடைக்கும் பொருட்களை மாணவர்களின் உணவில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மார்ச் மாதம் முதல் மாணவர்களின் கொடுப்பனவு 8000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.