மகனை கொடூரமாக தாக்கும் தந்தை!

  பதவிய, வெலிஓயா – சம்பத்நுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது மகனை தந்தையொருவர் கொடூரமான முறையில் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் மகனுக்கு உணவை ஊட்டும் அதேநேரம், தனது மகனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை வீடியோ எடுத்த அருகாமையில் இருந்த நபர் ,அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்
இதையடுத்து வெலிஓயா சம்பத்நுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதிலும், அவர் ஏற்கனவே பிரதேசத்தை விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் குகுல் சமிந்த அல்லது பிபிலே சமிந்த என அழைக்கப்படுபவரெனவும், இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்தச் சிறுவனை கொடூரமாகத் தாக்கியுள்ளதாகவும், அவருக்கு பயந்து எவரும் பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கவில்லையெனவும் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கண்டுபிடிக்க விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பத்நுவர பொலிஸார் தெரிவித்தனர்.