அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணம் அதிகரிப்பு!

அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகலுக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் புகைப்பட நகல் எடுப்பதற்கு பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் வசூலிக்கப்பட வேண்டிய அதிகபட்ச கட்டணம் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு அதிகபட்சமாக 150 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகல் நகலைப் பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்லைன் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.

மேலும், வரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும், பின்னர் படிப்படியாக அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.